உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு கம்ராலி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, கோடியான்-கா-பூர்வா கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அமனுல்லா கான் அவர்களை அடித்தே படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சம்பவத்தின் போது அவரும், அவர் மனைவியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். குண்டர்கள் தங்களிடமிருந்த கம்பால் அமனுல்லாகானை அவருடைய தலையில் அடித்ததால் சம்பவ இடத்திலேயே அமனுல்லாகான் இறந்துவிட்டார். பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வித பயமுமின்றி, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, சிறுபான்மையினரை படுகொலை செய்வது என்பது தொடர்கிறது. இப்போது பலியாகியிருப்பவர் ஓர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பதைப் பார்க்கும்போது எந்த அளவிற்கு பாஜகவின் வெறுப்பு அரசியல் சித்தாந்தம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. இத்தகைய குண்டர் கும்பலைத் தண்டிக்க வேண்டியவர்கள் அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல உன்னாவிலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண், விபத்து என்ற பெயரில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இதில் உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசும் ஒரு குற்றவாளிதான். இதுதான் பெண்கள் தொடர்பான பாஜகவின் கொள்கை. இதுதான் பாஜகவின் உண்மை முகம்.